கடத்தப்பட்ட போலீஸாரை மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரம் : ஒருவர் படுகொலை .
பீகாரின் லகிசாராய் மாவட்டத்தின் கஜ்ரா மலைப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, மாவோயிஸ்டுகள் திடீர் தாக்குதல் நடத்தியதில் 7 போலீஸார் கொல்லப்பட்டனர். அப்போது 4 போலீஸாரை, மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றனர். இந்நிலையில், பீகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 8 மாவோயிஸ்டுகளை புதன்கிழமைக்குள் விடுவித்தால் மட்டுமே கடத்தப்பட்ட போலீஸாரை விடுவிக்க முடியும் என்று மாவோயிஸ்டுகள் கெடு விதித்திருந்தனர். கெடு முடிந்த பின்னரும் சிறையிலிருந்த மாவோயிஸ்டுகள் விடுவிக்கப்படாத நிலையில், அவர்களை விடுவிக்க இன்று காலை பத்து மணி வரை அவகாசம் நீட்டிப்பதாக மாவோயிஸ்டுகள் அறிவித்திருந்தனர். இதனிடையே, போலீஸாரைக் கடத்திய மாவோயிஸ்டுகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களின் எல்லைப்பகுதியில் ஹெலிகாப்டர் மூலமும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாவோயிஸ்டுகள் அளித்த இரண்டாம் காலக்கெடுவும் முடிவடைந்த நிலையில் , நான்கு பேரில் ஒருவரை மாவோயிஸ்டுகள் படுகொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் பீகார் அரசை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
|